வைகுண்ட ஏகாதசி என்றால் கேட்க வேண்டாம்.
நான்கு மணிக்கு ஆரம்பிக்கும் வேலைகள். உப்பில்லாத சப்பாத்திகள்
இது பட்டினி கிடக்க முடியாத என் மாதிரி ஜன்மங்களுக்கு:)
ஒரு மூச்சில் வேலைகளை முடித்துக் கொண்டு தன்னைப் போலவே வயதான அக்கம்பக்கத்து பெண்களை அழைத்துக் கொண்டு
ஸ்ரீ பார்த்தசாரதியைப் பார்க்கக் கிளம்பிவிடுவார்.
பார்த்தசாரதியைத் தரிசனம் செய்த கையோடு அங்கேயெ குடியிருந்த தன் அக்கா ஒருவரையும், தங்கை ஒருவரையும் குசலம் விசாரித்துவிட்டு,
இரவு தங்கி
காலையில் துவாதசி பாரணை எனப்படும் நெல்லிமுள்ளிப் பச்சடி,அகத்திக்கீரை, மணத்தக்காளி போட்ட மோர்க்குழம்பு
இப்படி ஒரு மெனு கொண்ட சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு 22 ஆம் நம்பர் பஸ்ஸைப் பிடித்துப் புரசவாக்கம் வந்துவிடுவார்.
வரும்போது எனக்குப் பிடித்த இலைவடாம்,பந்தாய்க் கட்டின
ஸ்பெஷல் மல்லிகை,கோவிலுக்கு வெளியே அப்போது இருந்த
பாத்திரக் கடையிலிருந்து சின்னச் சின்ன பாத்திரங்கள், தயிர் உறை
குத்திவைக்க கல்சட்டிகள்,புது மத்துகள்,கீரை கடைய,மோர் சிலுப்ப...
தன்னுடன் வரும் தம்பி தாத்தம் என்கிற மாமாவையும் அனுப்பி
அங்கே இருக்கும் ஒரு கடையில் வாழைக்காய் பஜ்ஜியும்
வாங்கி கொண்டு வந்து கொடுப்பார்.
இதுதான் என் அப்போதைய ஏகாதசி. இப்போது இணைய ஏகாதசியாகி விட்டது:)
அழகாக ஒளிபரப்பிய பொதிகைத் தொலைக் காட்சிக்கு நன்றி.
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.