Tuesday, August 29, 2006

ஆஜி


ஆஜிப் பாட்டி இருந்து இருந்தால் இந்தக் கார்த்திகைக்கு 111

வயது ஆகி இருக்கும்.

அதென்ன ஆஜி? என்று எல்லோரும் கேட்பார்கள்.

இந்தப் பெயரோடு நான் இது வரை யாரையும் பார்த்தது இல்லை.

நற்குணங்களோடு ஒரு பெரிய குடும்பத்தை

நிர்வாகம் செய்தவர், அதுவும் 6 தலைமுறைகளோடு ஒற்றுமையாகப் பழகி எல்லோருக்கும்
நல்ல வழி காட்டியவர்.
எட்டு வயதில் ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்துக்கு
மருமகளாகி,
பதின்மூன்று வயதில் முதல் மகனைப் பெற்றவர்.
கும்பகோணம் பக்கத்தில் கடம்பங்குடி என்ற ஊரில்
சாதாரணமான ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்
ஆஜியின் தந்தை.
சிறு வயதில் பல ஆங்கிலேய மாவட்ட (1860)ஆட்சியாளர்களைப் பார்த்து எப்படியாவது வாழ்க்கையில்
முன்னேற வேண்டும் என்று தெளிவாகச் சிந்தித்து
அந்தக் கால வழக்கப்படி துண்டை உதறித் தோளில் போட்டு, கையில் வெறும் ஐந்து ரூபாயுடன்,
தீராதக் கல்வி தாகத்தோடு வந்தவர்.
அப்போது ரயிலுக்கு செலவழிக்கக் கூட அவரிடம் பணம் கிடையாது என்று பாட்டி சொல்லிக்
கேள்வி.
சென்னை வந்தவர் தன் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரிய
கிரிமினல் வழக்கறிஞரிடம் சேர்ந்தார்.
அந்தச் சிறு பையனின் அறிவும் தீர்க்கமும் பெரியவரை
ஈர்த்து விட்டன. மேலே படிக்க விருப்பமா என்று அவனைக் கேட்டபோது அவனும் தயங்கவில்லை.
எப்படியும் கடமையைச் செய்ய வேண்டும் என்று
உதவியை ஏற்றுக்கொண்டான்.
பெரியவரின் ஊகம் மோசம் போகவில்லை.
வழக்கறிஞராக வந்து நின்ற இளைஞனுக்குத்
தன் பெண்ணையேத் திருமணம் செய்து வைத்தார்.
மயிலைக் குளத்து அருகில் அப்போது வீடுகளும்
கோவில்களுமே இருந்தன.
அதில் ஒரு வீட்டில் குடியமர்த்தப்பட்டனர் இந்தத் தம்பதிகள்.
குடும்பம் பெருகியது. வருமானமும் பெருகியது.
நல்லபடியாக ஆளத்தெரிந்த அரசிபோல வளைய வந்த தன்
அம்மாவை ஆஜி எப்போதும் மறந்ததில்லை.
இதிலென்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா?
அந்த நூற்றாண்டில் பெண்கள் செல்லம் கொடுத்து வளர்க்கப் படவில்லை.புத்தி சொல்லி, சமையல் கற்றுக்கொடுத்து,
இன்னோரு வீட்டில் அடங்கி,நளபாகம் வேலை செய்து
வந்தவர்களை உபசரித்து,
குழந்தைகளைப் பெற்று,
அவர்களைத் தன் பிம்பமாக வளர்த்து................
வயதாகி அடங்க வேண்டியதுதான்.
இந்த அச்சில் வார்க்கப் பட்ட பொம்மையாக
இருக்க ஆஜி மறுத்ததுதான் அதிசயம்.
திருமணம் செய்ய வரனைத் தேர்ந்து எடுத்தது
என்னவோ தன் தந்தையாக இருந்தாலும்(திருமணத்திற்கு
அப்புறம்)
தன் வாழ்வை நிர்ணயிக்கும் மன உறுதி அவரிடம்
இருந்தது. அதை நினைத்துதான் எங்களுக்கெல்லாம்
ஆச்சர்யமாக இருக்கும்.
ஆஜிப் பாட்டி வாழ்க்கைப்பட்டது பெரிய மிராஸ்தார் குடும்பத்தில்.
ஆறு மைத்துனர்கள், இரண்டு நாத்தனார்கள்.
திருமணத்துக்கு முன்னாலேயெ இறைவன் திருவடி சேர்ந்ததால்,
திருமணம் செய்து வரும் குழந்தை மருமகளுக்கு அறிவுரை
சொல்லி, நடத்திச் செல்ல யாருமில்லை.
வீட்டு ஆண்களோ விவசாயத்தையும், வைதிகத்தையும்,
வேதாந்தத்தையும் விடாமல் பின்பற்றுபவர்கள்.
இந்த ஆஜிப் பாட்டிக்கு முன்னாலேயெ வந்து விட்ட முதல் மருமகள் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்ததால் கொஞ்சம் நெளிவு சுளிவு தெரிந்து
நடப்பாராம்.
மச்சு என்னும் மாடியில் பெண்கள் இருக்க, கீழே
கும்பல் கும்பலாக சாப்பாட்டுப் பந்தி நடக்கும் என்றும்,
சாப்பாட்டு மணம் வரும்போது பசி பொறுக்காமல் அந்த மச்சிலேயெ குமித்து வைத்து இருக்கும் உப்பு புளி, வெல்லம் எல்லாம் கலந்து அரிசி யோடு சாப்பிடப் பழகியதாகவும் சிரித்துக் கொண்டே சொல்லுவார்.
இவர்கள் சமையல் செய்யப் போகாத காரணம்,
அந்த சமயத்தில் ஆஜிப் பாட்டியின் மாமனார்
ஒரு மடாதிபதியாகப் பொறுப்பேற்றதுதான்.
பெண்களுக்கு சமையல் அறை பக்கம் போக முடியாது.
அதனால் மடத்தில் குருவைப் பார்க்க வருபவர்கள் நேரே
வீட்டுக்கு சாப்பிட வந்து விடுவார்கள்.
அந்தப் போஜனம் எல்லாம் முடிந்த பிறகுதான்
வீட்டுப் பெண்கள் சாப்பிட முடியும்.!
தினம் தினம் இந்தக் கதைதான்.
ஒருவழியாகத் தாத்தாவின் பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பும் முடியும் போது
சென்னைக்கு இருவரும் அனுப்பி வைக்கப் பட்டார்கள்
தாத்தா சட்டம் படித்து , குழந்தைகள் பிறந்தது அப்போதுதான்.
தாத்தாவுக்கு நிலபுலன்களைப் பார்த்துக் கொள்ளும் வேலையும் சேர்ந்து கொண்டதால்
பாதி நேரம் கும்பகோணம் போக வேண்டிய நிலைமை.
எத்தனை நாள் தந்தையின் வீட்டில் இருப்பது?
அதனால் ஆஜிப் பாட்டி தனக்கென்று ஒரு இடம்
வேண்டும் என்று தன் தந்தையின் ஆசியோடு 1930(என்று நினைக்கிறேன்)ல் இப்போது இருக்கும் சாலைக்கு
வீடும், தோட்டமும் மாடு கன்றுகளோடு வந்தார்கள்.
இதற்குள் ஆஜிப் பாட்டியின் குடும்பத்தில்
இரண்டு புதல்விகள், நான்கு புத்திரர்கள்.
எல்லோருக்கும் நல்ல கல்வி ஏற்பாடு
செய்து கொடுத்தார் ஆஜி..
கோமள
வல்லியாக இருந்த அம்மா , ஆஜி ஆனது அப்போதுதான்.
பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தது பங்களூரில்.
அந்தப் பெண்ணுக்குப் பிறந்த குழந்தைகள் , அந்த ஊர் வழக்கப் படி அஜ்ஜி(கன்னடத்தில் பாட்டி)
ஆஜி என்று கூப்பிட ஆரம்பித்ததும்
எல்லோருக்கும் ஆஜியாகி விட்டார்.
அவருக்கு மாற்றுப் பெண்களும் மாப்பிள்ளைகளும் வந்த
பிறகும் ஆஜி ஓய்வெடுத்து நான் பார்த்ததில்லை.
நிலத்திலிருந்து விளைந்து வரும் பொருட்களைத் தனியாக சீர்செய்து வைப்பது.,
அத்தனை பெரிய வீட்டுக்கு ஒரே ஒரு ஆளை வைத்து
சுத்தம் செய்வது, கடைக்குப் போவது,(மாட்டு வண்டியில் தான்) , பேத்திகள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்குப் போய்,
விவரங்கள் அறிவது,
மாடுகளுக்குத் தீவனம் வைத்து,பால் கறக்கும் ஆட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது,
சமையல் அறையில் நின்று தன் பெரிய சம்சாரத்துக்கு அளவாக அரிசி, பருப்பு, காய்கறி செலவு செய்து
வேளைக்கு சாப்பாடு செய்து போடுவது..
எப்போதும் சேமிப்புக்கு மாதந்தோறும்
பேரன்கள், பேத்திகள் கணக்கில் பணம் போடுவது.
மகன்களின் வருமானத்துக்கு மீறி செலவு இல்லாமல்
அவர்களைக் கட்டிக் காத்த குடும்பம் நடத்தும் பாங்கு
சொல்லிக் கொடுத்து,
தவறு செய்தால் திருத்திக் கொள்ள வழி சொல்லி,
நேர்மையிலிருந்து ஒரு துளி கூட விலகாமல்,
எல்லாப் பேரன் பேத்திகளுக்கும் கல்லூரி வரைப் படிக்க வைத்தவர்.
படிப்பின் அருமை தெரிந்தவர்.
4 வகுப்பு வரைதான் படித்தவர்.
ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடத்தெரியும்.
நான் என் லெண்டிங் லைபிரரிக்குப் போகும்போது,
கௌந்ட் ஆஃப் மாந்தி க்ரிஸ்டோ, ஷெர்லக் ஹோம்ஸ் நாவல்கள் தமிழாக்கப் பட்டவை, வை.மு.கோதைனாயகி அம்மாள் கதைகள் எல்லாம் எடுத்து வரசொல்லுவார்.
கூர்மையான புத்தி.
எதிராளியின் முகத்தை வைத்தே சொல்வது பொய்ய உண்மையா என்று எடை போடுவார்,.
எல்லாரிடமும் இருக்கும் பலம் பலவீனம் தெரியும்.
நேர்மையாக இருப்பவர்களைப்பார்த்தால் தனி அன்பு காட்டுவார்.
இறக்கும் தருணத்தில் அவர் தன் சொத்து என்று வைத்து இருந்தது இரண்டே இரண்டு நூல் புடவைகள்தான்.
மற்ற எல்லாவற்றையும் நாலு தலைமுறைகும் சமமாகப் பிரித்துக் கொடுத்து விட்டு,
வங்கியில் தன் ஈமச் சடங்குக்கு என்று எட்டு ஆயிரமும் வைத்துதான் இறந்தார்.
கீழே விழுந்ததால் தான் அந்த 88 வயதில் இறக்க நேர்ந்தது.
அதுவும் எப்படி?
தன் உயிர் சினேகிதியின் பேரன் அமெரிக்காவுக்கு
எடுத்துப் போக , காலை 4 மணிக்கு, சமையல் அறையில்
புளிக்காய்ச்சல் தயாரிக்கப் போனவர், எண்ணை சிந்தி இருப்பதை பார்க்காமல் வழுக்கி விழுந்து விட்டார்.
ஒரு நல்ல முற்போக்கு எண்ணங்கள் கொண்ட
அறிவாளி நிறை வாழ்வு வாழ்ந்து
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார்.
இத்தனை தனித் தன்மை பொருந்திய பெண் எனக்குப் புகுந்த வீட்டுப் பாட்டியானது என் அதிர்ஷ்டம் தான்.

17 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

நல்ல ஆதர்ஷ பெண்மணி.பாரதியார் காலத்தில் வாழ்ந்த அவர் கண்ட பெண்மணி.

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச, நன்றி. உடனே பின்னூட்டம்
போட்டதற்கு.
அந்த மாதிரி பெண்கள் இப்போது பார்க்க முடியாது.
அசராமல் வேலை செய்வார்.
திடமான ஆரோக்கியம்.எங்களுக்குத்தான் சில சமயம் கீப் அப் பண்ண முடியாது.

Porkodi (பொற்கொடி) said...

மஹாத்மா என்று ஒருவர் வாழ்ந்தாரா? அது சாத்தியமானு கேட்கும் காலமும் வரும்னு எங்கேயொ படிச்ச ஞாபகம் வருது.. அது போல தான் இதுவும்..

துளசி கோபால் said...

ஆஜி இஸ் க்ரேட்ப்பா. இந்த மாதிரி
இருக்கறவங்களைப் பத்திப் படிக்கமுடிஞ்சதே ஒரு பாக்கியம்தான்.

தி. ரா. ச.(T.R.C.) said...

அந்த மதிரி தைர்யமான பொண்ணுங்க இப்பவும் இருக்காங்க!இப்போ புதுசா வலைப்பதிவுலே இருக்காங்க.பேரு சரியா ஞாபகம் இல்லை ஸ்வர்ணலதாவா கூட இருக்கலாம்

பாலராஜன்கீதா said...

//பேரு சரியா ஞாபகம் இல்லை ஸ்வர்ணலதாவா கூட இருக்கலாம் //
வடமொழியில் எழுதினால் அவர்கள் பெயரைக் கண்டுபிடிக்க இயலாதா தி.ரா.ச.அய்யா ? "அவர்" ஏற்கனவே ஒரு பின்னூட்டம் அளித்திருக்கிறாரே
:-)

வல்லிசிம்ஹன் said...

வாங்க பாலராஜன் கீதா.
நல்ல கமெண்ட்.
இது தி.ரா.ச சார் போன வருடம் போட்ட பின்னூட்டம். அவருக்கு மறந்துகூடப் போயிருப்பார்.;-))

தருமி said...

//..மாற்றுப் பெண்களும் ..//

ஓ! இதுதான் மாட்டுப் பொண்ணுன்னு ஆகிப் போச்சா ..

வல்லிசிம்ஹன் said...

இப்படித்தான் மாறியது என்று இந்த ஆஜிப்பாட்டியின் கணவர்...தாத்தா சொல்லுவார்.

தமிழ் கொஞ்சம் படித்தவர்.
அதை அப்படியே நானும் எடுத்துக்கொண்டேன்.

இல்லாவிட்டால் எல்லோரும் கௌகேர்ள்
என்பார்கள் தருமி:-)

திவாண்ணா said...

நீங்க பதிவு போட்டு 2 வருஷம் ஆனாலும்.....
இப்படிப்பட்ட நபர்களைப்பத்தி படிக்கும்போது சந்தோஷமாக இருக்கு! அதனால் பின்னூட்டம் போட்டுட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் திவா.

ஆமாம் இப்போது இந்த மாதிரி மனிதர்களைப் பார்ப்பது சிரமம்தான்.
ரொம்ப ரொம்ப நன்றி. பொறுமையாகப் படித்ததற்கு.

திவாண்ணா said...

பொறுமை என்ன, படிக்க மகிழ்ச்சிதான்!

ஆயில்யன் said...

/சாப்பாட்டு மணம் வரும்போது பசி பொறுக்காமல் அந்த மச்சிலேயெ குமித்து வைத்து இருக்கும் உப்பு புளி, வெல்லம் எல்லாம் கலந்து அரிசி யோடு சாப்பிடப் பழகியதாகவும் சிரித்துக் கொண்டே சொல்லுவார்//

கொஞ்சம் அழுதேன்!

ஒரு நல்ல முற்போக்கு எண்ணங்கள் கொண்டஅறிவாளி நிறை வாழ்வு வாழ்ந்து
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார். இத்தனை தனித் தன்மை பொருந்திய பெண் எனக்குப் புகுந்த வீட்டுப் பாட்டியானது என் அதிர்ஷ்டம் தான்.

உண்மையிலேயே நீங்கள் கொடுத்துவைத்தவர்தான்! அதோடு மட்டுமல்லாமல் இத்தனை செய்திகளையும் உங்கள் மூலம் வெளியே தெரிந்து பல உள்ளங்களில் ஒரு பாதிப்பினை தந்தும் இருக்கும்!

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஆயில்யன்.
அந்த வருடம் அம்மாவை இழந்த நேரம் ,நினைவில் இருப்பதையெல்லாம் பதிந்து விடவேண்டும் என்று ஒரு வேகம்.

சுருக்கிச் சொல்லுவதைக் கற்க வேண்டும். நீண்டு விடுகின்றன சில பதிவுகள்.நன்றிம்மா.

ஸ்ரீராம். said...

ஒரு சிறந்த ஆத்மாவைப் பற்றி அறியத் தந்திருக்கிறீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். மிகப் பெர்ரிய குடும்பத்தைச் சர்வ சாதாரண்மாகக் கவனித்துக்கொண்டு நிர்வாகம் செய்தவர். வீட்டுக் கூடத்தில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே அத்தனை போக்கு வரவுகளையும் கவனிப்பார். ஒரு குழந்தை கூடச் சாப்பிடாமல் எங்கேயும் போக முடியாது.என் கடைசிப் பையன் அடம் பிடிப்பான் என்று எழுந்துவது வெல்லத்தோசை செய்து கொடுப்பார். பசியாயிருந்தால் பொறுக்க மாட்டார்.அதுபோலச் சோம்பேறிகளையும் பிடிக்காது.,

இன்னம்பூரான் said...

நான் ஒரு கேள்வி கேட்கப்போய், ஆஜிப்பாட்டி என்ற தெய்வத்தை கொண்டு வந்து முன்னாலே நிறுத்தி விட்டீர்கள். பின்னூட்டங்களே, அதுவும் திவாஜியிடமிருந்தும், வந்ததே, என் பாக்கியம். என் செக்காணூரணி கொள்ளுப்பாட்டியை நினைத்துக்க்கொண்டேன். நாம் ஒரு நாள் இவர்களின் பாமரகீர்த்தியை வடிவமைக்க கடமை பட்டுள்ளோம்.

நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்